வடமாகாணத்தில் சுதந்திரமான ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் இராணுவம் முகாம்களில் முடக்கப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு, தேர்தலுக்கான ஆயத்தங்கள் என்பன பற்றி பிபிசி தமிழோசைக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்களது வேட்பாளர் பட்டியல் சம்பந்தமாக பலநாட்களாக ஆராய்ந்த பிறகு, இறுதி முடிவுகள் ஏறத்தாழ முடிவடைந்திருக்கின்றன. எங்களுடைய நியமனப் பத்திரம் ஐந்து மாவட்டங்களிலும் சில நாட்களில் சமர்ப்பிக்கப்படும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுகூடி, தங்களது வேட்பாளர்கள் தொடர்பாக ஏகமனதாக முடிவெடுத்து, நாங்கள் ஒற்றுமையாக ஒருமித்து, மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
நியமனப் பத்திரங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. தாக்கல் செய்யப்படவும் இல்லை. இந்த நிலையில் ஏனைய கட்சிகளில் இருந்து அவற்றின் தலைவர்கள் யாராவது போட்டியிட விரும்பினால் அதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இருக்க முடியாது. அப்படி போட்டியிடுவார்களேயானால், அதற்குப் பரிபூரணமான ஒத்துழைப்பு அளிக்கப்படும். இடதுசாரி கட்சிகளின் ஆதரவை நாங்கள் வரவேற்கின்றோம். அதேவிதமான எங்களுடைய ஆதரவும் அவர்களுக்கு இருக்கும். வடமாகாணசபைத் தேர்தலைப் பொறுத்தமட்டில், விசேடமாக அவர்களுக்கு வேட்பாளர்கள் தெரிவில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதாக நான் கூறமாட்டேன். ஆனால் அவர்களுடன் தொடர்புடைய நபர்களது பெயர்களும் எங்களுடைய பட்டியலில் இருக்கலாம். அந்தக்கட்சிகளுடைய வேட்பாளர்களாக எமது கட்சியில் எவரும் போட்டியிடவில்லை. அவர்கள் முழுப்பேரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த கூட்டுக்கட்சிகளின் வேட்பாளர்கள்தான். ஆனால் அவர்களுடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுத்தான் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இராணுவத்தைப் பொறுத்த வரையில் அரசாங்கத் தரப்பில் செயற்பட்டு, ஆளும் கட்சிக்காக வேட்பாளர்களைத் தேடுவதில் அவர்கள் பங்களித்திருக்கின்றார்கள். அதேசமயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் செல்வாக்கைப் பெற்ற நபர்களைத் தேர்தலில் ஈடுபடக் கூடாது என்று அவர்களை அச்சுறுத்தல் செய்திருக்கின்றார்கள். இவ்விதமான பலவிதமான விடயங்கள் பற்றிய தகவல்கள் எங்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
ஆனபடியால் இவையெல்லாம் இராணுவம் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே தங்களுடைய அட்டூழியத்தை அரசாங்கத்தின் சார்பில் செயற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இது வரவேற்கத்தக்க ஒரு விடயமல்ல.
இது நிறுத்தப்படாவிட்டால், இது வேறு வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாக அமையும். தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாங்கள் சுதந்திரமாகச் செயற்படக்கூடிய பார்வையாளர்கள் வரவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டிருக்கின்றோம். இராணுவம் கட்டுப்படுத்தப்பட்டு, அவ ர்கள் தேர்தல் கருமங்களில் முழுமையாக ஈடுபடாமல் இருக்க வேண்டும். அரசாங்கம் ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்த விரு ம்பினால், இராணுவத்தை அவர்கள் தங்களுடைய முகாம்களில் வைத்துக் கொள்ள வேண்டும்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment