நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் சுகாதாரத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ள போதிலும் ,
போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாணத்தின் விசேட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகத் தனியான சுகாதாரத் திட்டம் ஒன்று தாயராகிவருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார் .
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்டக் கிளையினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பதிலுரையாற்றியபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் .
தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டத் தலைவர் டேவிட் நாகநாதன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்தக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டார் . பிரதம விருந்தினராக கட்சியின் தலைவர் ஆர் . சம்பந்தன் அழைக்கப்பட்டிருந்த போதிலும் வேலைப்பளு காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்று மாவட்டத் தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்தார் .
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் , தமிழரசுக் கட்சியின் யாழ் . மாவட்டத் தலைவரும் கட்சியின் பொருளாளருமாகிய கனகசபாபதி , கட்சியின் முக்கியஸ்தரும் வடமாகாண சபையின் தவிசாளருமாகிய சி.வி.கே. சிவஞானம் , வன்னி மாவட்டச் செயலாளர் சந்திரன் வாமதேவன் , சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா . சேனாதிராஜா , முஸ்லிம் சமூகப் பிரதிநிதியாக ஆசிரியர் அப்துல் சமது , கட்சியின் வன்னி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் , இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் , மற்றும் நெடுங்கேணி , செட்டிக்குளம் பிரதேச கிளைகளின் முக்கியஸ்தர்கள் , அங்கத்தவர்கள் , ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .
மாகாண அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமாகிய இராசநாயகம் வவுனியா கிளையின் சார்பில் வாழ்த்துமடல் வாசித்தளித்தார் . கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் அவருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் .
தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா , கட்சியின் பொருளாளரும் , யாழ் . மாவட்டத் தலைவருமாகிய கனகசபாபதி , வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் , சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா . சேனாதிராஜா , ஆசிரியரும் முஸ்லிம் பிரமுகருமாகிய அப்துல் சமது , திருமதி ஐயம்பிள்ளை , ஓய்வுபெற்ற கிராமசேவையாளரும் தொழிற்சங்கத் தலைவருமாகிய தேவராஜா , கட்சியின் வன்னிமாவட்ட இளைஞர் அணி தலைவர் உட்பட பலரும் இங்கு உரையாற்றினார்கள் .
வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது :
இலங்கை அரசாங்கத்தினால் நாட்டின் சுகாதாரத் தேவைகள் குறித்து ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது . போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண மக்களுடைய பல தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இந்தத் திட்டத்தில் அம்சங்கள் இல்லை . போரினால் பல வழிகளலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக அவர்களின் தேவை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது . தேவைகள் என்ன என்பதை அறிந்தால்தான் அவற்றை நிவர்த்திசெய்வதற்குரிய திட்டங்களை முன்னெடுக்க முடியும் . அந்த வகையில் வடமாகாண முதலமைச்சரின் ஆலோசனைக்கமைய வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களினதும் தேவைகளை மதிப்பீடு செய்யும் பணிகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் . அதேநேரம் வடமாகாணத்திற்கான சுகாதாரத் திட்டத்தைத் தயாரிப்பதில் 20 நிபுணர்கள் என்னுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றார்கள் . இந்தத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி எமது கைகளில் வந்துவிடும் . அதன் பின்னர் , நீண்டகால அடிப்படையில் வடமாகாணத்தின் சுகாதாரத் தேவைகளை கிடைக்கின்ற வளங்கள் , நிதி வசதிகள் மற்றும் புலம் பெயர் மக்களின் உதவிகள் என்பவற்றைப் பயன்படுத்தி பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம் .
போரினால் பாதிக்கப்பட்டு பலர் அவயவங்களை இழந்துள்ளார்கள் . இவர்களின் எண்ணிக்கை பெரிது . ஆனால் உண்மையில் எத்தனைபேர் அவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தெரியாமலிருக்கின்றது . இந்த விபரங்களைத் திரட்டுவதற்கும் , அதன் அடிப்படையில் அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் . போரினால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு பலர் இன்று சக்கர நாற்காலிகளில் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கின்றார்கள் . இவர்களில் பலருக்கு அடிப்படை வசதிகள் கிடையாது . இதனால் படுக்கைப்புண் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் உண்டு . இவர்களுடைய நன்மையைக் கருத்திற்கொண்டு வவுனியா , பம்பைமடு வைத்தியசாலையில் இவர்களை அரச செலவில் வைத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றோம் . விரைவில் அந்தப் பணிகள் முடிவடைந்துவிடும் . இதன் மூலம் வசதியற்ற தேவைகள் மிகுந்தவர்களை அங்கு வைத்துப் பராமரிக்க நாங்கள் எண்ணியுள்ளோம் .
இதேபோன்று யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களை வைத்துப் பராமரிப்பதற்கான நிலையங்களை அமைக்கவும் எண்ணியுள்ளோம் . மாகாண சபையில் உள்ள அதிகாரங்கள் , வளங்களைப் பயன்படுத்தி தேவைகள் மிகுந்த எமது மக்களுக்குப் பல சேவைகளை ஆற்றமுடியும் என்பது எனது நம்பிக்கை . முமாகாண சபைக்குப் போதிய அதிகாரங்கள் இருக்கின்றனவா ? இல்லையா என்ற பிரச்சினை ஒருபக்கம் இருக்க , எமக்குள்ள வளங்கள் , பலம் என்பவற்றைப் பயன்படுத்தி எம்மால் செய்யக் கூடிய பணிகளை முன்னெடுப்போம் . வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நாற்பதாயிரம் வாக்குகளை மக்கள் அளித்துள்ளார்கள் . அதில் இருபதாயிரம் வாக்குகளை எனக்களித்து என்னைத் தெரிவுசெய்து இந்தக் கௌரவமும் , பாராட்டுக்களும் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கே சேரும் . இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது . அதேநேரம் இளைஞர்களும் பெரியவர்களும் , தாய்மாரும் எனக்காகத் தேர்தல் காலத்தில் பாடுபட்டிருக்கின்றார்கள் . அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . அவர்கள் எவ்வளவு பாடுபட்டார்களோ , அதைவிட பலமடங்கு பாடுபட்டு , போரினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்காக நான் சேவையாற்றுவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
பல இணையத்தளங்கள் எங்களை விமர்சித்திருக்கின்றன . எனது மனைவியைப் பரீட்சை ஒன்றிற்காகக் கண்டிக்கு அழைத்துச் சென்றேன் . மறுநாளே அமைச்சர் உல்லாசப் பயணமாக கண்டிக்குச் சென்றுள்ளார் என்று இணையத்தளத்தில் செய்தி வருகின்றது . எமது சமூகத்தில் திறமைசாலிகள் இருக்கின்றார்கள் . அழகான கேலிச்சித்திரங்கள் , அழகான எழுத்துக்களில் விமர்சனங்கள் என்று அவர்கள் வெளியிடுகின்றார்கள் .
சிறந்த புலனாய்வுத் திறன்வாய்ந்த பலர் எம்மிடையே இருக்கின்றார்கள் . பலர் எங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது . அவர்களின் விமர்சனங்களை நான் வரவேற்கின்றேன் . சிறந்த அமைச்சராக , சிறந்த சேவையாற்றக் கூடிய வகையில் என்னை மாற்றிக்கொள்வதற்கு விமர்சனங்கள் முக்கியம் . அந்த விமர்சனங்களுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் . விமர்சனம் செய்பவர்கள் பொசிட்டிவ்வாக விமர்ச னங்களை முன்வைத்தால் அதன் ஊடாக நாங்கள் எங்களுடைய பணிகளைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும் .