நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களைப் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோது, செல்லத்துரை விஜயகுமார் என்பவருடைய தலைமையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த சுயேச்சை குழுவின் வேட்பு மனுவில் தலைமை வேட்பாளர் கையெழுத்திட தவறியிருந்தமையினால் அந்த மனு நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சை குழுக்களும் போட்டியிடவுள்ளன.
வடமாகாண சபைக்கான வவுனியா மாவட்டத்தின் 6 ஆசனங்களுக்காக 171 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளினாலும், சுயேச்சை குழுக்களினாலும் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பதற்காகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளினதும், சுயேச்சை குழுக்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதியும் சமுகமளித்திருந்தார்.
அங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் தெரிவித்ததாவது:
எதிர்வரும் செப்ெடம்பர் மாதம் 21 ஆம் திகதி இந்தத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளது. வடமாகாண சபைக்கான தேர்தலானது விசேடமானது. ஏனெனில் முதல் தடவையாக இந்தத் தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்தலை வெளிநாடுகளும் அவதானித்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. வன்முறைகள் இல்லாமல் சட்டதிட்டங்களுக்கமைவாக நியாயமான முறையில் இது நடைபெறும்.
நாங்கள் எந்தக்கட்சிக்கும் ஆதரவானவர்கள் அல்ல. எங்களுக்கு ஆண் பெண் என்ற இரண்டே இரண்டு கட்சிகளே உள்ளன. அரச அதிகாரிகளான எங்களுக்கு இரண்டு பொறுபுக்கள் இருக்கின்றன. ஒன்று நாங்கள் தேர்தல் ஆணையாளருக்குப் பொறுப்பு கூற வேண்டும். மற்றது, சட்டம் அத்துடன் நீதிமன்றத்திற்கும் நாங்கள் பொறுப்புக் கூறவேண்டும். எனவே இந்தத் தேர்தலை சரியான முறையில் நாங்கள் நடத்துவோம். என்னைப் பொறுத்தவரையில் பத்து, பதின்மூன்று ஆண்டுகள் தேர்தல்கள் நடத்துவதில் அனுபவம் பெற்றிருக்கின்றேன்.
அரச சொத்துக்களை இந்தத் தேர்தலில் பயன்படுத்த முடியாது. நகரும் மற்றும் நகராத அரச சொத்துக்களையும், ஆளணியாகிய அரச ஊழியர்களையும் தேர்தலில் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த முடியாது. அதற்கு அனுமதியில்லை.
இந்த மாவட்டத்தில் 94 ஆயிரத்து, 367 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள். இவர்கள் 89 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர்; புதுப்பித்தல் நடவடிக்கையின்போது பதிவு செய்யாத வாக்காளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையடுத்து, இந்த வாக்காளர் எண்ணிக்கையில் சிறிய மாற்றம் ஏற்படவுள்ளது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment