Home » , » யாழ்.மாவட்டத்தில் 10800 தபால் மூல வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர்: வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளர்

யாழ்.மாவட்டத்தில் 10800 தபால் மூல வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர்: வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளர்

வடமாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு யாழ்.மாவட்டத்தில் 10 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களைத் தவிர்ந்த ஏனைய விண்ணப்பதாரர்களுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை வாக்குச் சிட்டைகள் அனுப்பி வைக்கப்படுமென வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளரும் யாழ்.மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான சி.அச்சுதன் தெரிவித்தார்.


 இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பதாரர்களுக்கு வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படும். அத்துடன் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடன் கலந்துரையாடலொன்றும் யாழ். பொது நூலகத்தில் நடைபெறும். நல்லூர் கந்தன் ஆலயம் மற்றும் செல்வச் சந்நிதி ஆலயச் சூழல்களில் பிரசாரங்களை மேற்கொள்ளவோ அல்லது சுவரொட்டிகளை ஒட்டவோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் கட்சி சார்ந்த சுவரொட்டிகள் வீதிகளில் ஓரமாக உள்ள சுவர்களில் ஒட்டப்படுவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலுள்ள ஆளும் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் தேர்தல் பிரசார பதாதைகளையும் அப்புறப்படுத்தப்படவேண்மென சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் தெரிவித்தமைக்கு அமைவாக சுவரொட்டிகளும் தேர்தல் பதாதைகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

 சாவகச்சேரி பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் பொலிஸாரினால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. வடமராட்சிப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமையை அடுத்து அங்குள்ள சுவரொட்டிகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம் என்றார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com