பிரபாகரனுக்கே அச்சப்படாத நாங்கள் விக்கினேஸ்வரனுக்கு அச்சப்படமாட்டோம். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளை தோற்கடிக்க நாட்டு மக்களை இணைத்துக்கொண்டு களத்தில் இறங்க தயாராகிவிட்டோம் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இவ்வளவு அழிவுகள் இடம்பெற்ற பின்னர் கூட தமிழ்க் கூட்டமைப்பு மாற்றமடையவில்லை. அவர்கள் தமது மூன்றாவது யுத்தத்தை தற்போது ஆரம்பித்துள்ளனர். இதற்கு பின்னரும் எம்மால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஆயுதங்களை ஏந்துமாறு தமிழ்த் தலைவர்கள் கூறும்போது நாங்கள் வெறுமனே இருந்து கொண்டிருக்க முடியாது என்றும் ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
மேலும் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு வடக்குத் தேர்தலுக்கு முன்னர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டதால் அக்குழுவிலிருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துவிட்டோம். இனி பாராளுமன்றத்துக்கு வெளியேயிருந்து பிரிவினைவாதத்துக்கு எதிராக போராடப்போகின்றோம் என்றும் ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment