Home » , , » சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டவர்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவங்கள்!- த.தே.கூட்டமைப்பு கண்டனம்

சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டவர்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவங்கள்!- த.தே.கூட்டமைப்பு கண்டனம்

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றமை மோசமான தேர்தல் மோசடி நடைபெறவுள்ளமைக்கான எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.



2012ம் ஆண்டின் பிற்பகுதியில் மேற்படி மாவட்டங்களிலிருந்து இராணுவத்தினரால் சிவில் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவர்கள் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வடக்கில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

கடந்த 2012ம் ஆண்டு இராணுவத்தின் சிவில் தொடர்புகளுக்கான அலுவலகங்கள் ஊடாக அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கான அனுமதி கடிதங்கள் கூட இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த கடிதங்களில் தற்காலிக பணி என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதைவிட இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் தற்போது சாந்தபுரம், தேராவில், தேறாங்கண்டல் முக்கொம்பன் போன்ற இடங்களில் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் பண்ணைகளிலும் முன்பள்ளி ஆசிரியர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

 மேலும் இவர்களே கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அதேபோல் இவர்கள் அரசாங்கம் சார்ந்த அரசியல் கட்சிகளினாலும், இராணுவத்தினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தபால் மூல வாக்களிப்பில் தாம் குறிப்பிடுபவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

எனவே நீதியான, சுதந்திரமான வாக்களிப்பு இடம்பெறுவது சாத்தியமற்றது.

தபால் மூல வாக்களிப்பு நேரடியாக தேர்தல் பணிகளுடன் தொடர்புபட்டு வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல கால அவகாசம் இல்லாத அரசாங்க ஊழியர்களுக்கே வழங்கப்படுகின்றது.

எனவே என்ன அடிப்படையில் சிவில் பாதுகாப்பு படை பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்றது என்பது குறித்து அனைவருக்குமே தெரியும்.

இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அவர்களும் சாதாரண மக்களே. அவர்கள் சுதந்திரமாக வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்குள்ள அவர்களுடைய வாக்களிக்கும் உரிமை நசுக்கப்படக் கூடாது.

இந்த விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும்.

மேலும் இவ்விடயம் குறித்து கட்சியின் உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசும் என்றார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com