வடக்கு முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் நல்லது செய்ய நினைத்தால் அல்லது எங்களது நலன்களில் அக்கறை கொண்டிருந்தால் இத்தேர்தலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளட்டும் அதுவே எமக்கு செய்யும் பேருதவியாகும்.வடக்கில் முஸ்லிம் பிரதி நிதித்துவம் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை தனித்து களம் இறக்கியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் தெரிவித்துவருவதானது மன்னார் மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் உப்புக்குளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது –
மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம்களின் வாக்குப்பலம் சொற்பமானதாகும் தனது சுய இலாபத்திற்காக மக்களின் வாக்குகளை பிரித்து பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கச்செய்வதுதான் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கம் இதற்கு மக்கள் ஒரு போதும் இடம் தர மாட்டோம்;. இதனால் பாதிப்படையப் போவது ரவூப் ஹக்கீம் அல்ல எமது வடமாகாண மக்கள் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.கடந்த 22 வருடங்களாக எமது மக்கள் அகதிகளாகி பட்ட துன்ப துயரங்களை ஒரு போதும் எம்மால் மறந்துவிட முடியாது.
மீண்டும் அவ்வாறானதொரு இடப்பெயர்வு குறித்து நினைத்துப்பார்க்க கூட முடியாது.
எமது மாவட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் ஆளும் ஆட்சியில் இருப்பதன் மூலம் மட்டும் தான் முடியும் என்பது யதார்த்தமாகும்.எதிர்கட்சியில் அமர்ந்து எதனையும் சாதிக்க முடியாது. எனது பதவிக்காலத்தில் மக்களிற்காக அதனை பயன்படுத்திவந்துள்ளேன்.
என்னிடத்தில் இனவாதம் மதவாதம் பிரதேசவாதம் என்பன இல்லை.எல்லா மக்களும் சமமானவர்கள்.இறைவனது படைப்பில் மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்றே பார்த்துவந்துள்ளேன்.இன்றும் கூட மக்களுக்கு என்ன தேவையோ அதனை பெற்றுக் கொடுத்துவருகின்றேன்.எந்த சமூகத்திற்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டினையும் நான் செய்ததில்லை.
வீடமைப்பு திட்டங்கள் மின்சார வசதிகள் பாதை புணரமைப்புக்கள் கல்வி சார் நடவடிக்கைகள் நியமணங்கள் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் நேர்மைத் தன்மையுடன் அமைச்சருக்கு உதவியாக செயற்பட்டுவருகின்றேன்.
இந்த தேர்தலில் வெற்றி பெறும் ஆளும் கட்சியில் எமது பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்படுவதன் மூலம் தான் வடமாகாண சபையில் இம்மாவட்ட மக்களது குரலாக அவற்றை அங்கு ஒலிக்கச் செய்ய முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் றிப்கான் பதியுதீன் கூறினார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment