வடமாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுவதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவியைப் பயன்படுத்தி போரினால் அழிந்து சிதைவடைந்த நிலையிலுள்ள எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும். எனவே கூட்டமைப்பின் அமோக வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலி.தென்மேற்குப் பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் தெரிவித்தார்.
வலி.தென்மேற்குப் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலிலும் பார்க்க இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான தேர்தலாகும். இத் தேர்தல் தமிழ் மக்களின் உரிமையை நிலை நாட்டும் தேர்தலாகும். மக்களின் வாக்களிக்கும் வீதத்தை அதிகரிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல் ஏனோதானோ என்றிருக்காமல் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எவருக்கும் வாக்களிக்கலாம் அது மக்களின் உரிமையாகும்.
பிரதேச சபையில் இடம்பெற்று வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். அது பற்றி எவரும் குழப்பமடையத் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தலுக்கு அனைவரும் ஒன்றுபட்டு வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
மாகாண சபை என்பது அபிவிருத்திக்கான முக்கிய படிக்கல்லாகும். இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதன் ஊடாக தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வினையும் பெற்றுக் கொள்ளமுடியும்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதன் ஊடாக வடக்கினை வெளிநாட்டவர்களிடமிருந்து கிடைக்கும் நிதியுதவிகளின் ஊடாக மீளக் கட்டியெழுப்ப முடியும். மாகாண சபையின் ஊடாக வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி இப்பிரதேசத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்யமுடியும்.
எனவே சகல தமிழ் மக்களும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையை உணர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யவேண்டும்.
இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியே தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டும் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment